பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என இவர் பாடாத மொழிகளே இல்லை. கடந்த 5-ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியானதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்கும் நிலையில், நுரையீரல் பாதிப்பை சரி செய்யும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

எஸ்.பி.பி., மகன் சரண் நேற்று வெளியிட்ட வீடியோவில், ‘என் தந்தையின் உடல் நிலை சீராக உள்ளது… நினைவுடன் உள்ளார். ‘என்னை அடையாளம் கண்டுகொண்டார். ‘நீங்கள் குணமடைய அனைவரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்’ என, அவரிடம் தெரிவித்தேன். என்னையும், என் தாயின் உடல் நலத்தையும், சைகை காட்டி கேட்டறிந்தார் என்று தெரிவித்துள்ளார். மேலும் ‘என் தந்தை, விரைவில் பூரண குணமடைந்து, அனைவரையும் சந்திப்பார்.
மருத்துவக் குழுவினர், அவரை மீட்டெடுக்க அளித்து வரும் சிகிச்சைக்கு நன்றி’ என, தெரிவித்துள்ளார். இந்த தகவல், உலகம் முழுவதும் இருக்கும் எஸ்.பி.பி.,யின் லட்சக்கணக்கான ரசிகர்கள் மத்தியில், மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ‘எஸ்.பி.பி.,க்கு எக்மோ, வென்டிலேட்டர் உதவியுடன், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.’அவரது உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணிக்கின்றனர்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.