ஆணவக் கொலையில் கணவரை இழந்து மறுமணம் செய்து கொண்ட உடுமலை கெளசல்யா வெலிங்டன் கண்டோன்மென்டில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த சங்கரும், கெளசல்யாவும் காதலித்த நிலையில் குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்தனர். இந்நிலையில், கடந்த 2016-ஆம் ஆண்டு பட்டப்பகலில் சங்கர் வெட்டிக் கொல்லப்பட்டார். கெளசல்யாவின் பெற்றோர் இந்த ஆணவக்கொலையை செய்தது தெரியவந்தது. இந்நிலையில் சக்தி என்பவரை கெளசல்யா சமீபத்தில் மறுமணம் செய்தார். இதனிடையில் நீலகிரி குன்னூரில் உள்ள வெலிங்டன் கண்டோன்மென்டில் கெளசல்யா கிளார்க் பணி செய்து வந்தார்.
அவர் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கெளசல்யாவை வெலிங்டன் கண்டோன்மென்ட் நிர்வாகம் அதே குற்றச்சாட்டின் அடிப்படையில் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.